விஷவாயு தாக்கி இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

விஷவாயு தாக்கி இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-19 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் பாதாள சாக்கடை அடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளிகளான மாதவன், சக்திவேல் ஆகியோர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி நாகை நகராட்சி அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நாகை மாலி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சீனி.மணி, மாவட்ட தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இழப்பீடு

விஷவாயு தாக்கி உயிரிழந்த மாதவன், சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நாகை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கழிவுநீரை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களை பயன்படுத்தாமல் ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நாகை ஒன்றிய செயலாளர் பகு, நகர செயலாளர் பெரியசாமி உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்