தஞ்சை மாநகராட்சி அலுவலகத்துக்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக காலிக்குடங்களுடன் வந்த பொதுமக்கள்

தஞ்சை 1-வது வார்டில் குடிநீர் வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்தனர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.

Update: 2019-08-20 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த வெண்ணாற்றங்கரையில் நீரேற்று நிலையம் அருகே உள்ளது 1-வது வார்டு. இந்த பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர கிடைப்பது இல்லை. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குடிநீர் குழாய்கள் தற்போது துருப்பிடித்து பயன்பாட்டில் இல்லை.

இதனால் தற்போது பொதுக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்கள் குடிநீருக்காக மெயின்சாலைக்கு நடந்து வர வேண்டி உள்ளது. பலமுறை குடிநீர் இணைப்பு குழாய் அமைத்து தருமாறு கேட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி மாநகரக்குழு உறுப்பினர் ராஜன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாநகர செயலாளர் குருசாமி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்களை மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உடனடியாக அந்த பகுதி மக்களுக்கு லாரிகளில் குடிநீர் வழங்குவதாகவும், அங்கு ஆய்வு செய்து ஓரிருநாளில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையொட்டி மாநகராட்சி வளாகத்தில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்