தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.20 லட்சம் மோசடி பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு

நாகர்கோவில் அருகே தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-08-20 22:15 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் மாதவபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, தொழில் அதிபர். இவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

டெல்லியை சேர்ந்த பெர்த்தமெலின் என்ற பெண்ணிடம் இருந்து கடந்த 1-ந் தேதி எனது இ-மெயிலுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அவர் ஒரு பெண் என்றும், தனக்கு புற்று நோய் இருப்பதாவும் கூறி இருந்தார். மேலும் தன்னிடம் ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் உள்ளதாகவும், அது வெளிநாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

ரூ.20 லட்சம் மோசடி

இந்த தொகையை உங்களது (கிருஷ்னசாமி) வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறி, அதற்காக எனது வங்கி கணக்கு எண் மற்றும் பிற ரகசிய தகவல்களை கேட்டறிந்தார். அதன்பிறகு பார்த்த போது, எனது வங்கி கணக்கில் இருந்த ரூ.20 லட்சத்து 27 ஆயிரத்து 245-ஐ எடுத்தது தெரிய வந்தது. இந்த நூதன மோசடியில் தொடர்புடைய பெர்த்தமெலின் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பேரிஸ்டர் பால், சர்டாலி குர்ஷல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்