வானூரை சேர்ந்த பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வானூரை சேர்ந்த பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-08-21 22:30 GMT
விழுப்புரம்,

வானூர் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் உதயராஜ் (வயது 26). பிரபல ரவுடியான இவர் மீது விழுப்புரம், வானூர், மரக்காணம், ஆரோவில் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி வழக்கு என பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக உதயராஜை ஆரோவில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், இவருடைய குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து ரவுடி உதயராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் உதயராஜை நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் ஆரோவில் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்