சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை; திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திண்டுக் கல் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-08-22 22:45 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவள் 4 வயது சிறுமி. அங்கன்வாடி மையத்துக்கு சென்று வந்தாள். இந்த நிலையில் கடந்த 14.12.2017-ம் அன்று தாயார் கோவிலுக்கு சென்று விட்டதால், சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்தாள். அன்று அவளுடைய பாட்டி ரேஷன்கடைக்கு செல்ல வேண்டியது இருந்தது.

இதனால் முதலில் ரேஷன் கடைக்கு சென்று விட்டு, பின்னர் அங்கன்வாடி மையத்துக்கு சிறுமியை அழைத்து செல்ல பாட்டி முடிவு செய்தார். எனவே, சிறுமியை அழைத்து கொண்டு ரேஷன்கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்தார். அப்போது அய்யலூர் அருகேயுள்ள குப்பாம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ராஜ்குமார் (தற்போது வயது 19), மொபட்டில் அந்த வழியாக வந்தார்.

மேலும் தன்னுடன் மொபட்டில் வருமாறு 2 பேரையும் அழைத்தார். இதையடுத்து சிறுமியும், பாட்டியும் ராஜ்குமாரின் மொபட்டில் ஏறிக் கொண்டனர். சிறிது தூரத்தில் வீட்டுக்கு செல்லும் பாதை வந்ததும் 2 பேரும் இறங்கினர். அப்போது சிறுமியை, அங்கன்வாடி மையத்தில் இறக்கி விடுவதாக கூறி அவளை மட்டும் ராஜ்குமார் அழைத்து சென்றார். இதற்கிடையே மதியம் சிறுமியை அழைத்து வருவதற்காக பாட்டி, அங்கன்வாடி மையத்துக்கு சென்றார்.

அப்போது சிறுமி அங்கன்வாடி மையத்துக்கு வரவில்லை என்று பணியாளர் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியை பாட்டி மற்றும் உறவினர்கள் தேடினர். இதில் கிணத்துப்பட்டியில் அரசு பள்ளி அருகேயுள்ள சுடுகாடு வழியாக மொபட்டில் சிறுமியை, ஒருவர் கடத்தி சென்றதாக ஊர் மக்கள் கூறினர். இதையடுத்து அந்த பகுதிக்கு சென்று சிறுமியை தேடினர். அப்போது சுடுகாட்டுக்கு அருகேயுள்ள மலையில் முட்புதரில் சிறுமியின் ஆடைகள், செருப்பு ஆகியவை கிடந்தன.

மேலும் சிறிது தூரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கற்களை அகற்றினர். அங்கு கண்ட காட்சி சிறுமியின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளித்தது. கற்களுக்கு அடியில் ஆடைகள் எதுவும் இல்லாமல் உடலில் காயங்களுடன் சிறுமி பிணமாக கிடந்தாள். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டு இருந்தாள். மேலும் அவள் காலில் அணிந்து இருந்த கொலுசுகளை காணவில்லை.

அதேநேரம் சிறுமியை அழைத்து சென்ற ராஜ்குமார் தலைமறைவாகி விட்டார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமாரை பிடித்து விசாரித்தனர். அதில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ததை ராஜ்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை, கைது செய்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் நடந்த போது ராஜ்குமாருக்கு 17 வயது தான் ஆகி இருந்தது. இதனால் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கின் விசாரணை, திண்டுக்கல் இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் நடைபெற்றது. பின்னர் திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி புருஷோத்தமன் வழக்கை விசாரித்தார்.

சிறுமியின் பாட்டி உள்பட மொத்தம் 44 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பளித்தார். இதில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்