மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல் ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-08-23 22:45 GMT
செங்குன்றம்,

சென்னை திருமுல்லைவாயல் தென்றல் நகர் பெத்தனப்பன் தெருவை சேர்ந்தவர் டில்லிபாபு(வயது 36). அதேபோல் புழல் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன்(42). இவர்கள் இருவரும் மாதவரத்தில் உள்ள மிளகாய், பருப்பு ஆகியவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

நேற்று காலை டில்லிபாபு, தனது வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்றார். செல்லும் வழியில் புழலில் ஆனந்தனை ஏற்றிச்சென்றார். புழல் சைக்கிள் ஷாப் அருகே ஜி.என்.டி. சாலையில் மாதவரம் நோக்கி அவர்கள் சென்றனர்.

அப்போது செங்குன்றத்தில் இருந்து மாதவரம் நோக்கி இவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த டில்லிபாபு, ஆனந்தன் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான காரை தேடி வருகின்றனர்.

விபத்தில் பலியான டில்லிபாபுவுக்கு சந்தியா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். ஆனந்தனுக்கு அமுதவல்லி என்ற மனைவியும், ஆகாஷ்(15), அர்ஜுன்(11) என 2 மகன்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்