ஆற்காடு அருகே, கார் மோதி 2 வாலிபர்கள் பலி

ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-08-25 22:15 GMT
ஆற்காடு, 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மெழுகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 20), அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (20), கார் டிரைவர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வெங்கடேசன், பார்த்தீபன் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி வந்தனர். அப்போது ஆற்காட்டில் இருந்து ஆரணி நோக்கி சென்ற கார் விளாப்பாக்கம் தனியார் கல்லூரி அருகே வெங்கடேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன், பார்த்தீபன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த வேலூர் தொரப்பாடியை சேர்ந்த கார் டிரைவர் இம்ரான், ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் பலியான வெங்கடேசன், பார்த்தீபன் ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்