காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோரை மிரட்ட விஷம் குடித்த இளம்பெண் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் மீது போலீசில் புகார்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரை மிரட்ட விஷம் குடித்த இளம்பெண் இறந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2019-08-27 23:00 GMT
ஹாசன்,

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா தொட்டகரடி கிராமத்தை சேர்ந்தவர் அனிஷா(வயது 20). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த புனித் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் அனிஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அனிஷாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவும் பெற்றோர் முடிவு செய்தனர்.

இதுகுறித்து அனிஷா தனது காதலரான புனித்திடம் கூறியுள்ளார். அப்போது விஷம் குடிப்பது போல் நடித்து மிரட்டி, நமது திருமணத்திற்கு உனது பெற்றோரிடம் சம்மதம் வாங்குமாறு அனிஷாவிடம், புனித் கூறியதாக தெரிகிறது. அதன்படி நேற்று காலை வீட்டில் இருந்த அனிஷா பெற்றோரை மிரட்டுவதற்காக அனிஷா விஷம் குடித்தார்.

இதில் வாயில் நுரைதள்ளிய நிலையில் அனிஷா மயங்கி விழுந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அனிஷாவிடம் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அனிஷா இறந்து விட்டார்.

இதுபற்றி அறிந்த சென்னராயப்பட்டணா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனிஷாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது புனித் கூறியதால் தான் அனிஷா விஷம் குடித்ததும், இதில் அவர் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் எங்கள் மகள் அனிஷாவின் சாவுக்கு, புனித் தான் காரணம் என்றும், அனிஷாவை புனித் தான் தற்கொலைக்கு தூண்டினார் என்றும் அவர் மீது அனிஷாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்