மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க தேவைப்பட்டால் கர்நாடக சட்டசபை கூட்டப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி

மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க, தேவைப்பட்டால் கர்நாடக சட்டசபை கூட்டப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

Update: 2019-08-27 23:45 GMT
சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா மலைமனே கிராமத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்கமகளூருவுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மலைமனே கிராமத்திற்கு சென்று அங்கு மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடியூரப்பா ஆறுதல் கூறினார்.

அவருடன் மந்திரி சி.டி.ரவி, எம்.எல்.ஏ.குமாரசாமி, ஷோபா எம்.பி., மாவட்ட பா.ஜனதா தலைவர் ஜீவராஜ், கலெக்டர் பாகதி கவுதம், போலீஸ் சூப்பிரண்டு ஹரீஷ் பாண்டே ஆகியோரும் சென்றனர். ஆய்வு பணிகளை முடித்ததும் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

மூடிகெரே தாலுகாவில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு வேறு எந்த தாலுகாவிலும் ஏற்படவில்லை. இந்த தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் புதிதாக வீடு கட்டி தரப்படும். அதுவரை வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் வாடகை பணமும் கொடுக்கப்படும். மூடிகெரேயில் ஏற்பட்டு உள்ள சேதம் குறித்து அறிக்கை தயார் செய்து என்னை சந்திக்க வரும்படி கலெக்டரிடம் கூறி உள்ளேன்.

கர்நாடகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க கர்நாடக சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார். இதுகுறித்து விவாதிக்க தேவைப்பட்டால் கர்நாடக சட்டசபை கூட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையை மந்திரிகள் ஏற்க விரும்பாதது பற்றி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், நான் அங்கு மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வந்து உள்ளேன். வேறு எதுவும் என்னிடம் பேச வேண்டாம் என்று கூறினார்.

மேலும் செய்திகள்