மனைவியை கேலி செய்ததை தட்டிக்கேட்டவர் கொலை: கணவன்- மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கேலி செய்ததை தட்டிக்கேட்டவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன்- மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-08-27 23:30 GMT
நாகர்கோவில்,

மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு கல்லத்தான் விளையை சேர்ந்தவர் ராஜன் (வயது 42), தொழிலாளி. இவருடைய மனைவி புஷ்பலதா. இவரை, மடத்துவிளையை சேர்ந்த ரெஜி (38), இவருடைய சகோதரர் ஷாஜி (34) ஆகியோர் அடிக்கடி கேலி- கிண்டல் செய்து வந்துள்ளனர்.

இதை ராஜன் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 5-7-2014 அன்று ராஜன் தன்னுடைய மனைவி புஷ்பலதா மற்றும் சகோதரர் விஜயகுமார் ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

தாக்குதல்

அப்போது ரெஜி, அவருடைய மனைவி அஜிதா (34) மற்றும் ஷாஜி ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து ராஜன் மற்றும் விஜயகுமாரை வழிமறித்து கம்பு, வெட்டுக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராஜன் பரிதாபமாக இறந்தார். விஜயகுமார் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

ஆயுள் தண்டனை

இந்த கொலை தொடர்பாக ரெஜி, அவருடைய மனைவி அஜிதா மற்றும் ரெஜியின் தம்பி ஷாஜி ஆகிய 3 பேரையும் மார்த்தாண்டம் போலீசார் கைது செய்து நாகர்கோவிலில் உள்ள கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை நீதிபதி நம்பி விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட ரெஜி, அஜிதா மற்றும் ஷாஜி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஞானசேகர் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்