திருக்கோவிலூரில், வேளாண்மை அதிகாரி வீட்டில் பணம்-நகை கொள்ளை - போலீசார் விசாரணை

திருக்கோவிலூரில் வேளாண்மை அதிகாரி வீட்டில் பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-09-01 22:45 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அதிர்ஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 55). இவர் திருக்கோவிலூரில் உதவி வேளாண்மை அலுவலராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டின் பக்கவாட்டில் இருந்த ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த 2 பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பிச்சென்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் புகழேந்தி தூங்கி எழுந்து பார்த்தபோது, தனது வீட்டில் கொள்ளைபோயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து அவர் திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வேளாண்மை அதிகாரி வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்