கொள்ளிடத்தில், தண்டவாளத்தை கடந்த சரக்கு ஆட்டோ, ரெயில்வே கேட்டை உடைத்தது

கொள்ளிடத்தில், தண்டவாளத்தை கடந்த சரக்கு ஆட்டோ, ரெயில்வே கேட்டை உடைத்தது.

Update: 2019-09-01 22:45 GMT
கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் இருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் சாலையின் குறுக்கே ரெயில்பாதை செல்கிறது. ரெயில் வருவதற்கு முன்பு கேட்டை மூடி சென்றவுடன் திறந்து விடுவதற்கு 24 மணி நேரமும் கேட்கீப்பர் பணியில் இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று பகல் 12.30 மணியளவில் மதுரையில் இருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு வண்டி வருவதையொட்டி முன்னதாகவே கேட்கீப்பர் கேட்டை மூடிக்கொண்டிருந்தார்.

அப்போது கொள்ளிடத்தில் இருந்து ஆச்சாள்புரம் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ அவசர அவசரமாக ரெயில்வே தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த போது கேட்கீப்பர் கேட்டை மூடியதால் கேட்டின் இரும்பு குழாய் லோடு ஆட்டோவின் மேல் பகுதியில் சிக்கி ரெயில்வே கேட் உடைந்தது. இதனால் கேட்டை மூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே கேட்டுக்கு பதில் தற்காலிகமாக இரும்பு சங்கிலியை ரெயில்வே ஊழியர்கள் பயன்படுத்தினர். அப்போது கொள்ளிடம் ரெயில்வே கேட்டை பகல் 12.30 மணிக்கு சோழன் விரைவு ரெயில் கடந்து சென்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை ரெயில்வே பாதுகாப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்