தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: கூடுதல் வீடியோ ஆதாரங்களை பெற சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கூடுதல் வீடியோ ஆதாரங்களை பெற சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Update: 2019-09-02 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு, தடியடியில் 13 பேர் பலியானார்கள். போலீசார் மற்றும் பொதுமக்கள் பலரும் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை சி.பி.ஐ. சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் பல்வேறு ஆவணங்களை சேகரித்து உள்ளனர். தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள், போராட்டத்தில் பங்கேற்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள், போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கூடுதல் வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு உள்ளனர். அதன்படி கூடுதல் வீடியோ ஆதாரங்களை கேட்டு மாவட்ட நிர்வாகத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் அணுகி உள்ளனர். அதன்பேரில், துப்பாக்கி சூடு நடந்தபோது, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான வீடியோக்களை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்த விவரங்களை கோர்ட்டில் தெரிவிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை அறிவுறுத்தி உள்ளது. அதன்பேரில் வருகிற 16-ந் தேதி விசாரணை அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்