வல்லநாடு, தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கொத்தனார் பலி

வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கொத்தனார் பலியானார்.

Update: 2019-09-02 21:30 GMT
ஸ்ரீவைகுண்டம்,

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள சிங்கிகுளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகநயினார். இவருடைய மகன் முத்துமாரி (வயது 38) கொத்தனார். இவருடைய மனைவி கனகா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துமாரியின் உறவினர் ஒருவர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இறந்து விட்டார். எனவே முத்துமாரி, உறவினரின் துக்க வீட்டுக்கு சென்றார்.

நேற்று உறவினரின் இறுதிச்சடங்கு நடந்த பின்னர் அனைவரும் வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். அப்போது முத்துமாரி எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதியில் மூழ்கினார். உடனே அவருடைய உறவினர்கள், ஆற்றில் இறங்கி தேடியும் முத்துமாரியை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, காற்றடைத்த டியூப் மூலம் ஆற்றில் இறங்கி தேடி, முத்துமாரியின் உடலை பிணமாக மீட்டனர்.

பின்னர் முறப்பநாடு போலீசார், இறந்த முத்துமாரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க வீட்டுக்கு சென்றபோது, தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கொத்தனார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்