அவினாசி அருகே கார்கள் மோதல்; 7 பேர் காயம்

அவினாசி அருகே 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-09-02 22:00 GMT
அவினாசி,

உடுமலையை சேர்ந்தவர் தனசேகரன் (வயது39). இவரும் இவரது உறவினர்களான அம்பிகாபதி (49), அமராவதி(54), கலைவாணி(48), மற்றும் சிறுவன் சரண்(9) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் கோவை மாவட்டம் சிறுமுகையில் இருந்து உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை தனசேகரன் ஓட்டினார்.

அவினாசியை அடுத்து நரியம்பள்ளி அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஈரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மற்றொரு கார் சென்று கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் 2 கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற தனசேகரன், அம்பிகாவதி, அமராவதி, கலைவாணி மற்றும் சிறுவன் சரண் உள்பட 5 பேரும் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற காரில் இருந்த தம்பதியர் அறிவுடைநம்பி மற்றும் அவருடைய மனைவி மெர்சி ஆகியோர் காயமடைந்தனர். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்