ஆம்பூர் அருகே, தடுப்பு கம்பி மீது கார் மோதியதில் வாலிபர் சாவு - மற்றொரு விபத்தில் தம்பதி உள்பட 10 பேர் படுகாயம்

ஆம்பூர் அருகே தடுப்பு கம்பி மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு விபத்தில் தம்பதி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-09-03 22:30 GMT
ஆம்பூர், 

குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. அவருடைய மகன் விஜய் (வயது 26). இவர், பெங்களூருவில் கட்டிட காண்டிராக்டர் வேலை செய்து வந்தார். விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு ஊருக்கு வந்த அவர் நேற்று காரில் நண்பர்களை அழைத்துக்கொண்டு பெங்களூருவுக்கு சென்றார்.

ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு கம்பி மீது கார் மோதியது. இந்த விபத்தில் விஜய் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா கூரையூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (34). இவர், தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றுவிட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் சென்றபோது ஏற்கனவே விபத்துக்குள்ளாகி கிடந்த வாகனத்தின் மீது கார் மோதியது.

இந்த விபத்தில் சரவணன், அவருடைய மனைவி அபர்ணா, அவர்களுடைய மகன் சந்தோஷ்குமார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த விபத்துகள் குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்