புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து தஞ்சையில், வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து தஞ்சையில், வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Update: 2019-09-03 21:30 GMT
தஞ்சாவூர்,

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்து தஞ்சையில் நேற்று ஒரு நாள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்க அலுவலகம் முன்பு இருந்து கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக நுழைவு வாயிலுக்கு வந்தனர்.

அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கீழமை வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் நல்லதுரை தலைமை தாங்கினார். வக்கீல் சங்க தலைவர் குமரவேல், செயலாளர் கீர்த்திவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிவசுப்பிரமணியன், சித்தார்த்தன், இளம்பரிதி, சின்னசாமி, மாதவன், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் வக்கீல் நல்லதுரை கூறுகையில், “புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் 149-வது பிரிவை நீக்க வேண்டும். சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் வழக்கில் வக்கீல்கள் தேவை இல்லை என்று புதிய திட்டத்தை சட்டமாக கொண்டு வந்துள்ளனர். இது மக்கள் விரோத, வக்கீல்கள் விரோத சட்டமாகும். எனவே இந்த சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். மேற்கு வங்க அரசு இந்த சட்ட திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்று கூறி உள்ளது. அதே போல் தமிழக அரசும் இதனை ஏற்க கூடாது” என்றார்.

மேலும் செய்திகள்