மாமல்லபுரம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி அக்காள், தம்பி சாவு

மாமல்லபுரம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அக்காள், தம்பி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-09-04 22:30 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் வெட்டுவாங்கேணி சின்னான்டிகுப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, இவரது மனைவி தாட்சாயிணி (வயது 32). இவரது தம்பி பகவதி (20). இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு ஈ.சி.ஆரில் செய்யூரை அடுத்த தழுதாளிகுப்பத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் என்ற இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பகவதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தாட்சாயிணியை சிகிச்சைக்காக மாமல்லபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்