பண்ருட்டி அருகே, காதலியின் கர்ப்பத்தை கலைத்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு - வாலிபர் கைது

பண்ருட்டி அருகே காதலியின் கர்ப்பத்தை கலைத்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-05 22:30 GMT
பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டையை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் ஜெயராஜ்(வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். மேலும் தனிமையில் சந்தித்தபோது ஜெயராஜ், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியிடம் உல்லாசம் அனுபவித்தார். இதனால் அந்த மாணவி, கர்ப்பமானார். இது பற்றி மாணவி, தனது காதலனிடம் கூறியுள்ளார். அதற்கு ஜெயராஜ், கருவை கலைப்பதற்கான மாத்திரைகளை வாங்கிக்கொடுத்து கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

அதன்பிறகு ஜெயராஜ், தனது காதலியுடன் பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். இதனால் அவர் தன்னை ஏமாற்றி விடுவோரோ என்று நினைத்த மாணவி, ஜெயராஜியிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். அதற்கு அவர், உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் தர வேண்டும் என்றும், அதை கொடுக்கவில்லை என்றால் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்