பள்ளிப்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

பள்ளிப்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-05 22:15 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கொத்தகுப்பம் ஊராட்சி பாதகுப்பம் கிராமத்தில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவர்களுக்கு சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலிகுடங்களுடன் அத்திமாஞ்சேரிப்பேட்டை- பொதட்டூர்பேட்டை சாலை யில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களுக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்