சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்குவதை பிரதமருடன் சேர்ந்து பார்க்க ஆச்சாரியா பள்ளி மாணவி தேர்வு

விண்வெளி ஆய்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரதமருடன் சேர்ந்து இந்த நிகழ்வை பள்ளி மாணவ-மாணவிகளும் சேர்ந்து பார்வையிட அனுமதி அளிப்பதாக ‘இஸ்ரோ’ அறிவித்தது.

Update: 2019-09-05 23:19 GMT
புதுச்சேரி,

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை அனுப்பி உள்ளது. அந்த விண்கலத்திலிருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி பிரிந்து சென்று நாளை (சனிக்கிழமை) நிலவில் தரை இறங்குகிறது. அது தரை இறங்கும் நிகழ்வை விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பிரதமர் மோடியும் இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து பார்வையிடுகிறார்.

விண்வெளி ஆய்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரதமருடன் சேர்ந்து இந்த நிகழ்வை பள்ளி மாணவ-மாணவிகளும் சேர்ந்து பார்வையிட அனுமதி அளிப்பதாக ‘இஸ்ரோ’ அறிவித்தது. இதற்காக இணையதளம் மூலம் வினாடி - வினா போட்டி நடத்தி மாணவர்களை தேர்வு செய்தது.

இதில் கலந்து கொண்டு புதுச்சேரி ஆச்சார்யா பள்ளி மாணவர்கள் 332 பேர் பங்கேற்பு சான்றிதழ் பெற்றனர். ‘விக்ரம் லேண்டர்’ தரை இறங்கும் நிகழ்வை பிரதமருடன் சேர்ந்து பார்க்க இந்த பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி மதுமிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவி மதுமிதாவை ஆச்சார்யா கல்விக்குழும நிறுவனர் ஜெ.அரவிந்தன், முதல்வர் கவிதா, துணை முதல்வர் சந்திரா, ஆசிரியை சிவகாமி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்