பரமக்குடி அருகே வாடகை காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய மர்ம நபர்கள் - போலீசார் தீவிர விசாரணை

பரமக்குடி அருகே வாடகை காரில் இருந்து தப்பியோடி பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2019-09-06 23:00 GMT
பரமக்குடி,

கோயம்புத்தூரை சேர்ந்த கவுதம் என்பவர் வாடகை கார் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 26-ந்தேதி அந்த நிறுவனத்துக்கு சென்ற 2 பேர் ஒரு காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். இதற்காக ரூ.35,000 தருவதாக கூறி ரூ.10,000 மட்டும் கொடுத்து விட்டு காரை எடுத்துச்சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் காருக்கு வாடகை செலுத்தாமலும், குறிப்பிட்ட நாளில் காரை திரும்ப கொடுக்காமலும் ஊர், ஊராக சுற்றியுள்ளனர். இதையடுத்து அவர்களை கவுதம் செல்போனில் தொடர்பு கொண்டபோது எவ்வித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து ஜி.பி.எஸ். கருவி மூலம் கவுதம் அந்த கார் செல்லும் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். பின்பு தனது நண்பர்களை அந்த காரை பின் தொடர செய்துள்ளார். இதன்படி நேற்று முன்தினம் இந்த கார் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் செல்வதைக்கண்டு கவுதமின் நண்பர்கள் அதனை வழியில் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் வாடகை பணம், கார் ஆகியவற்றை கொடுக்கும்படி பேசிக்கொண்டிருக்கும் போதே மர்ம நபர்கள் காரை வேகமாக எடுத்து தப்பிச்சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து அவர்கள் அந்த காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது அந்த கார் இரவு பரமக்குடி பாலன் நகர் பகுதியில் சென்ற போது மீண்டும் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதே சமயம் காரில் வந்த இருவரும் காரை நிறுத்தி பூட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து பரமக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் ஆலோசனையின் பேரில் போலீசார் அந்த காரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த காரின் கதவு கண்ணாடியை உடைத்து உள்ளே சோதனையிட்டனர். அப்போது காருக்குள் 2 பாஸ்போர்ட்டு, 3 செல்போன்கள் இருப்பதை கண்டுபிடித்து கைப்பற்றினர்.

அந்த பாஸ்போர்ட்டு தேவிப்பட்டினம் நயினா முகமது மகன் அப்துல் காசீம், தொண்டி நூர் இபுராகீம் மகன் நயினார் சித்திக் ஆகியோருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

மேலும் அந்த 3 செல்போனில் இருந்த சிம்கார்டுகளும் அந்தமானை சேர்ந்தது என்பதும், தேவிப்பட்டினம் அப்துல் காசீம் மீது போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கு உள்ளது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காரில் இருந்து தப்பிச்சென்ற இருவர் யார்? எந்த ஊர்? என கோயம்புத்தூர் கவுதமிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் பரமக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்