மனைவி இறந்த வேதனையில் சிறிது நேரத்தில் கணவரும் சாவு: அந்தியூர் அருகே இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

அந்தியூர் அருகே இறப்பிலும் இணைபிரியாமல் மனைவி இறந்த வேதனையில் சிறிது நேரத்தில் கணவரும் இறந்தார்.

Update: 2019-09-08 23:45 GMT
அந்தியூர்,

அந்தியூர் அருகே ஆலயங்கரடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 83). தொழிலாளி. இவருடைய மனைவி காமாட்சி அம்மாள் (78). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் பழனியப்பனும், காமாட்சி அம்மாளும் தனியாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக இவர்கள் 2 பேரும் வயது மூப்புக்காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவ்வப்போது அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காமாட்சி அம்மாள் நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவருடைய கணவர் பழனியப்பன் கதறி அழுததோடு, மிகுந்த மனவேதனையில் இருந்தார்.

பின்னர் அவரும் சிறிது நேரத்தில் திடீரென இறந்துவிட்டார். கணவனும், மனைவியும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பழனியப்பன் மற்றும் காமாட்சி அம்மாளின் உடல்களை பார்த்து அவர்களுடைய மகன், மகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரின் உடல்களும் அந்தப்பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்