சிறுமியை கடத்தி விபசாரத்தில் தள்ளிய பெண் கைது - மகளே போலீசில் சிக்க வைத்தார்

சிறுமியை கடத்தி சென்று விபசாரத்தில் தள்ளிய தனது தாயை இளம்பெண் போலீசில் சிக்க வைத்தார். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-08 23:00 GMT
மும்பை,

மும்பை காமத்திபுரா பகுதியை சேர்ந்தவர் ரீனா(வயது45). இவர் தற்போது ராஜஸ்தானில் வசித்து வருகிறார். நவிமும்பையில் கணவருடன் வசித்து வரும் ரீனாவின் 22 வயது மகள் அண்மையில் ராஜஸ்தான் சென்றிருந்தார். அப்போது தனது தாய் வீட்டில் 14 வயது சிறுமி ஒருத்தி இருந்தாள்.

அந்த சிறுமியை விபசாரத்தில் தள்ளி ரீனா பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரீனாவின் மகள் அந்த சிறுமியை மும்பைக்கு அழைத்து வந்து விசாரித்தார்.

அப்போது சிறுமி, தான் 7 வயதாக இருக்கும் போது மிராரோடு ரெயில் நிலையம் அருகே பூ விற்று வந்ததாகவும், அப்போது ஒரு நாள் ரீனா உள்பட 7 பேர் தன்னை ரெயிலில் கடத்தி கொண்டு காமத்திபுரா கொண்டு சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து ராஜஸ்தான் கொண்டு சென்று வீட்டு வேலைகள் செய்ய வைத்ததாகவும் கூறினாள்.

மேலும் 14 வயதானவுடன் தன்னை விபசாரத்தில் தள்ளியதாகவும் கூறி அழுதாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரீனாவின் மகள் சிறுமியை நாக்பாடா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

அங்கு போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறி பெற்ற தாய் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை வசாய் ரெயில்வே போலீசுக்கு மாற்றினார்கள். போலீசார் ரீனா, அவரது சகோதரர் சஞ்சய் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 2 பெண்கள் கைதானார்கள். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மீட்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை கண்டுபிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்