பள்ளி விளையாட்டு விழாவில் ஒலிம்பிக் ஜோதி சரிந்து பிளஸ்-2 மாணவர் தீயில் கருகி சாவு

பள்ளி விளையாட்டு விழாவில் ஒலிம்பிக் ஜோதி சரிந்து பிளஸ்-2 மாணவர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-09-09 23:45 GMT
செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் ராம கிருஷ்ணா ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கூலி தொழிலாளி முருகன் என்பவரது மகன் விக்னேஷ் இந்த பள்ளியில் பிளஸ்-2 கம்ப்யூட்டர் பிரிவில் படித்து வந்தார். விளையாட்டில் ஆர்வம் கொண்ட விக்னேஷ் கடந்த 30-ந்தேதி பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியபடி வலம் வரும் நிகழ்வில் பங்கேற்றார்.

மற்றொரு மாணவரின் கையில் மாற்றும்போது ஒலிம்பிக் ஜோதி சரிந்து விக்னேஷ் மீது விழுந்தது. இதில் அவரது உடையில் விழுந்த தீப்பொறி உடல் முழுவதும் பரவியது. உடல் கருகிய விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். பள்ளி விளையாட்டு விழாவில் ஒலிம்பிக் ஜோதி சரிந்து மாணவர் பலியான தகவல் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

அந்த பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்