பாண்டமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு

பாண்டங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-09-09 23:00 GMT
பரமத்திவேலூர்,

பாண்டமங்கலம் அருகே உள்ள கொந்தளம் சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் மருதை வீரன் மகன் பிரேம்குமார் (வயது 30), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு அண்ணாநகர் சென்று விட்டு வீட்டிற்கு செல்ல நெட்டையாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பிரேம்குமார் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி உள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய பிரேம்குமாரை அருகில் இருந்தவர்கள் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரேம்குமார் உயிரிழந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பொன்மலர்பாளையம் மகாமுனி நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் லோகநாதன் (32) படுகாயம் அடைந்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்