அத்திகானூரில் கால்நடை பாதுகாப்பு திட்ட மருத்துவ முகாம்- கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்

அத்திகானூரில் கால்நடை பாதுகாப்பு திட்ட மருத்துவ முகாமை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

Update: 2019-09-09 23:15 GMT
மத்தூர்,

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணன்டஅள்ளி ஊராட்சி அத்திகானூர் கிராமத்தில் தமிழக முதல்-அமைச்சரின் கால்நடை பாதுகாப்பு திட்ட மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முன்னதாக மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:- இந்த மருத்துவ முகாமில் கால்நடை மருத்துவ குழுவை சேர்ந்த மருத்துவர்கள் மூலம் கால்நடைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கட்டணமின்றி செயற்கை முறை கருவூட்டல் செய்தல், ஸ்கேன் கருவி மூலம் சினை பரிசோதனை செய்தல், மலட்டு நீக்க சிகிச்சை செய்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், சுண்டுவாத அறுவை சிகிச்சை செய்தல், அனைத்து கால்நடைகளுக்கும் தாதுஉப்பு கலவை வழங்குதல் மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல், கால் நடை வளர்ப்பு சம்பந்தமான விளக்கங்கள் அளித்தல், தீவனப்பயிர் வளர்ப்பு பற்றி ஆலோசனை வழங்குதல் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் தங்கள் கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை பெற்று பயன் பெறலாம்.

இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் 140 கால்நடை மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. அதே போல கடந்த ஆண்டு நடைபெற்ற கால்நடை முகாமில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 700 கால் நடைகள் பயனடைந்துள்ளன. அவற்றில் 300 கன்றுகள் ஈன்று 1 லட்சம் லிட்டர் பால் கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல் 4,200 சினை ஊசிகள் பசுகளுக்கு போடப்பட்டுள்ளது. மத்திகிரி கால்நடை பண்ணையில் மாதம் தோறும் 1 லட்சம் கோழி குஞ்சுகள் தயார் செய்கின்ற அளவிற்கு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. தளவாடங்கள் பொருத்தும் பணிகள் முடிந்தவுடன் கோழி குஞ்சுகள் வளர்த்து அனைத்து கிராமங்களுக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் கோழி வளர்ப்போருக்கு தலா 50 கோழி குஞ்சுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடைபராமரிப்புத்துறை துணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், உதவி இயக்குனர் டாக்டர் மரியசுந்தர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்