மராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி அரசின் பதவி காலம் முடிகிறது - சட்டசபை தேர்தல் தேதி வெளியாகிறது

கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் மராட்டிய சட்டசபை தேர்தல் தேதி ஆனந்த சதுர்த்திக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-09-10 00:32 GMT
மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. தேர்தல் முடிவில் 15 ஆண்டு காலமாக கூட்டணி அரசை நடத்தி வந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தோல்வியை தழுவின.

பா.ஜனதா 122 இடங்கள் பிடித்து பெரிய கட்சியாக திகழ்ந்தது. ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை என்றபோதிலும், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைத்தது. பின்னர் சிவசேனாவும் அரசில் பங்கேற்றது. இதனால் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு நீடிக்க முடிந்தது.

இந்த நிலையில் 5 ஆண்டு கால பா.ஜனதா - சிவசேனா கூட்டணி அரசின் பதவி காலம் முடிவு பெறுகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) சட்டசபைக்கு தேர்தல் நடைபெற வேண்டும். அதன்படி தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு குறித்து கடந்த வாரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பல்தேவ் சிங் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் போலீஸ், சாலை போக்குவரத்து, ரெயில்வே உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேர்தலை அமைதியாக நடத்தவும், தேர்தல் பணியாளர்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்ல வாகன வசதி ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மராட்டியத்தில் தற்போது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடந்து வருகிறது. இதன் நிறைவு விழாவான ஆனந்த சதுர்த்தி (விநாயகர் சிலைகள் கரைப்பு) வருகிற வியாழக்கிழமை நடக்கிறது. இந்த விழா முடிந்த பிறகு சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்து விடும். அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. பா.ஜனதா- சிவசேனா ஒரு அணியாகவும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.

காங்கிரஸ் 111 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 104 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்றும், எஞ்சிய தொகுதிகளில் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தேசியவாத காங்கிரஸ் மும்பை தலைவர் நவாப் மாலிக் தெரிவித்து உள்ளார்.

பா.ஜனதா- சிவசேனா கூட்டணி கட்சிகள் சரிசம தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறப்பட்டது. அதன்படி அந்த கட்சிகள் தலா 135 தொகுதிகளில் போட்டியிட்டு எஞ்சிய 18 தொகுதிகளை சிறிய கட்சிகளுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்து.

ஆனால், நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து போன்ற காரணங்களால் பா.ஜனதாவுக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக அக்கட்சி கருதுகிறது. எனவே சிவசேனாவை விட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட பா.ஜனதா விரும்புகிறது.

இதுபற்றி நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் நிருபர்கள் கேட்டபோது, பா.ஜனதா- சிவசேனா கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என்றும், தொகுதி பங்கீடு பார்முலா விரிவான ஆலோசனைக்கு பிறகு இறுதி செய்யப்படும் என்றும் கூறினார். கூட்டணி வெற்றி பெற்றால் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே முதல்-மந்திரி ஆவாரா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளிப்பதை உத்தவ் தாக்கரே தவிர்த்தார்.

இதற்கிடையே தேர்தல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த தலைவர்கள் பா.ஜனதா, சிவசேனாவுக்கு தாவி வருகிறார்கள். நேற்று தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர்களான ராய்காட் தொகுதி எம்.பி. சுனில் தத்காரே, அவ்துத் தத்காரே எம்.எல்.ஏ. ஆகியோர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தனர்.

மேலும் செய்திகள்