நெல்லையில் நாளை சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் கலெக்டர் ஷில்பா தகவல்

சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் நெல்லையில் நாளை(வியாழக்கிழமை) நடைபெறுவதாக கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

Update: 2019-09-10 21:30 GMT
நெல்லை, 

சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் நெல்லையில் நாளை(வியாழக்கிழமை) நடைபெறுவதாக கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினர்களான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவுப்படுத்தவும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சிறுவணிகக் கடன், கல்விக் கடன், கறவை மாட்டுக் கடன் மற்றும் ஆட்டோ கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

ஆவணங்கள்

இந்த கடன் திட்டங்கள் தொடர்பான விவரங்களையும் சந்தேகங்களையும் தெளிவுப்படுத்திக் கொள்ளவும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஏதுவாக நாளை(வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில்் உள்ள மக்கள் கூட்ட அரங்கில் வைத்து கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் கடன் தேவைப்படும் சிறுபான்மையின மக்கள் கடன் தொகை பெற ஆதார் அட்டை நகல், சாதிச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், இருப்பிடச்சான்றிதழ் நகல் மற்றும் வங்கி கேட்கும் இதர ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்