அரவக்குறிச்சி அருகே, புறா வேட்டையாட சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு

அரவக்குறிச்சி அருகே புறா வேட்டையாட சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-09-11 21:30 GMT
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே செல்லி வலசை சேர்ந்தவர் பொன்னரசு ( வயது 37). இவர் தனது நண்பர் அதே ஊரை சேர்ந்த தாமோதரனை (29) அழைத்து கொண்டு, செல்லிவலசில் உள்ள ஒரு தோட்டத்திற்கு புறாக்களை வேட்டையாடுவதற்காக சென்றனர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றினுள் புறாக்கள் நின்று கொண்டிருந்தது. இதனை பொன்னரசு தனது கையில் வைத்திருந்த உண்டிவில் கொண்டு அடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பொன்னரசு கால் தவறி கிணற்றில் விழுந்தார்.

இதைக்கண்ட தாமோதரன் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றில் விழுந்த பொன்னரசுவை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் முடியவில்லை. பின்னர் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் கிணற்றில் இறங்கி பொன்னரசுவை தேடினர். நீண்ட நேர இடைவெளிக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து அரவக் குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொன்னரசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்