‘செல்பி’ மோகத்தில் விபரீதம்: அடவிநயினார் அணையில் விழுந்து படுகாயமடைந்த வாலிபர் சாவு

‘செல்பி’ மோகத்தில் அடவிநயினார் அணையில் தவறி விழுந்து படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2019-09-12 22:00 GMT
அச்சன்புதூர், 

‘செல்பி’ மோகத்தில் அடவிநயினார் அணையில் தவறி விழுந்து படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்.

‘செல்பி’ எடுக்க முயற்சி

நெல்லை மாவட்டம் வடகரை மதரஸா தெருவை சேர்ந்த சாகுல் அமீது மகன் ஜாகிர் உசேன் (வயது 18). இவர் சம்பவத்தன்று அடவிநயினார் அணைப்பகுதிக்கு சென்றார். அங்கு தண்ணீர் நிரம்பி வழிந்த அணையின் பகுதியை நீண்டநேரம் ரசித்து பார்த்தார். பின்னர் அந்த பகுதியில் சுமார் 10 அடி உயர அணை சுவரில் ஏறினார்.

அங்கிருந்தவாறு தண்ணீர் நிரம்பி வழியும் பகுதியை தன்னுடைய பின்பகுதியில் தெரியுமாறு செல்போன் மூலம் ‘செல்பி’ எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது நிலை தடுமாறிய அவர் அணையில் இருந்து தண்ணீர் வழிந்தோடும் தடாகத்தில் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கினார்.

பரிதாப சாவு

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘செல்பி’ மோகத்தில் அடவிநயினார் அணையில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்