விழுப்புரம் அருகே, காரில் கடத்திய சாராயம் பறிமுதல் - டிரைவருக்கு வலைவீச்சு

விழுப்புரம் அருகே காரில் கடத்திய சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-09-12 22:15 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஹரிவிநாயகமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார், சந்தேகத்தின்பேரில் வழி மறித்தனர். போலீசாரை பார்த்ததும் காரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அந்த காரை போலீசார் சோதனை செய்ததில் காரினுள் 4 சாக்கு மூட்டைகளில் 300 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் பகுதிக்கு சாராயத்தை கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து சாராய பாக்கெட்டுகளையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்