மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் விபரீதம் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

பூதப்பாண்டி அருகே குடும்ப தகராறில் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-09-12 22:45 GMT
பூதப்பாண்டி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் ஆசாரிமார்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயசேகர் (வயது 36), விவசாயி. இவருடைய மனைவி சாரதா (33). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கணவன்- மனைவி இடையே நேற்று முன்தினம் குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சாரதா கோபித்துக் கொண்டு பிள்ளைகளுடன் சந்தவிளையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். அதன்பின்பு, வீட்டில் தனியாக இருந்த ஜெயசேகர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில், நேற்று காலையில் சாரதா மீண்டும் வீட்டுக்கு வந்த போது, கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. அவர் நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த சாரதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஜெயசேகர் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்