ரெயில் நிலையத்தில் டிஜிட்டல் தகவல் பலகை பழுது - பயணிகள் அவதி

கரூர் ரெயில் நிலையத்தில் டிஜிட்டல் தகவல் பலகை பழுதாகியிருப்பதால் பயணிகள் அவதியடைந்தனர்.

Update: 2019-09-12 21:45 GMT
கரூர்,

கரூர் நகரில் டெக்ஸ்டைல் ஜவுளி, கொசுவலை, பஸ்பாடி கட்டும் நிறுவனம் என பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருப்பதால் பல தொழி லாளர்கள் நேரடியாகவும், மறைமுகவுமாகவும் வேலைவாய்ப்பினை பெறுகின்றனர். அந்த வகையில் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வேலை முடிந்து தங்களது ஊருக்கு செல்வதற்கு கரூர் ரெயில் நிலையத்தினை போக்குவரத்திற்கு பிரதானமாக பயன்படுத்துகின்றனர். இதைத்தவிர கரூரில் இருந்து சென்னை, கோவை, சேலம், மதுரை, நெல்லை என வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் நீண்ட தூர பயணத்தினை ரெயில் மூலமாக பயணிகள் பலர் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் பயணிகளின் நலன் கருதி கரூர் ரெயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் நவீன டிஜிட்டல் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதில் ரெயில்கள் வரும் நேரம், செல்லும் நேரம், ரெயில் தாமதம் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படுவதால் அது பயணிகளுக்கு உதவிகரமாக இருக்கிறது. இதைத்தவிர ரெயில் நிலைய நடைமேடையிலும் ரெயில்பெட்டி எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க டிஜிட்டல் பலகை உள்ளது. இந்த நிலையில் இந்த நவீன டிஜிட்டல் பலகை பழுதாகியுள்ளதால், அவசர அவசரமாக ரெயிலை பிடிக்க வரும் பயணிகள், பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் ரெயில் விவரத்தை தெரிந்து கொள்ள முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பழுதான ரெயில் நிலைய தகவல் பலகையினை சீரமைத்து தர வேண்டும். மேலும் ரெயில் நிலைய வளாகத்தில் பயன்பாடின்றி கிடக்கும் ஏ.டி.எம். எந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். ரெயில் நிலைய தண்டவாளத்தில் ஆபத்தை உணராமல் நடந்து வருபவர்களை கண்காணித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ரெயில்வே அதிகாரிகளுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்