மாணவி அனிதா தற்கொலை குறித்த விசாரணையை விலக்கி கொள்ள ஆணையத்தில் பெற்றோர்கள் மனு

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பான விசாரணையை விலக்கிக் கொள்ள வேண்டும் என அவரது பெற்றோர்கள் ஆணையத்தில் மனு அளித்து உள்ளனர் என இந்திய தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணை தலைவர் முருகன் கூறினார்.

Update: 2019-09-12 22:15 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கலெக்டர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்திய தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணை தலைவர் முருகன் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விடுதிகளின் தரம், வீட்டுமனை பட்டா வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதேபோல கடந்த 2 ஆண்டுகளில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் இப்பொது மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

நீட் தேர்வில் வெற்றி பெறாததால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை தொடர்பான விசாரணையை ஆணையம் நடத்தி வருகிறது. இந்த விசாரணையை விலக்கிக் கொள்ள வேண்டும் என அவரது பெற்றோர்கள் தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திடம் மனு செய்துள்ளனர். என்ன காரணத்தினால் அவர்கள் விசாரணையை விலக்கி கொள்ள வேண்டும் என மனு கொடுத்துள்ளனர் என்பது குறித்து தெரியாது.

அது குறித்து ஆணையம் பரிசீலித்து கொண்டு இருக்கிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளில் பதிவாகும் வழக்குகள், விசாரணை மற்றும் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் வழக்கு தொடர்ந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் சார்ஜ் ஷீட் போட வேண்டும். அவ்வாறு போடாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

மதுரை மாவட்டம் காயம் பட்டியில் ஒரே குடிநீர் தொட்டியில் ஆதிதிராவிட மக்களுக்கு என தனி வால்வு அமைக்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வேறெங்கும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பல பள்ளிகளில் இன்னமும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாமல் உள்ளது. உடனடியாக மாநில அரசு இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்