கும்மிடிப்பூண்டியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம்-மதுபாட்டில்கள் திருட்டு

கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டை உடைத்து ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2019-09-13 22:15 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் உள்ள வளைக்குண்டு என்ற இடத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. நேற்று காலை அவ்வழியாக சென்ற பழனி (வயது 43) என்பவர் மதுக்கடையின் இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கடை திறந்து கிடப்பதை கண்டு கடையின் மேற்பார்வையாளரான குமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து, குமார் அங்கு வந்து பார்த்தபோது, கடையில் இருந்த உயர்ரக மதுபாட்டில்கள் சிலவற்றையும், கல்லாப்பெட்டியில் இருந்த ரொக்கப்பணம் மற்றும் சில்லரை காசுகளையும் அள்ளிச்சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசுக்கு குமார் புகார் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடைக்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் கடையின் வெளியில் இருந்த கண்காணிப்பு கேமராவை மேல் நோக்கி திருப்பி வைத்து விட்டு, உருட்டு கட்டையால் மின்சார மீட்டர் இணைப்பை அடித்து உடைத்து, கடையின் மின் இணைப்பை துண்டித்தது தெரியவந்தது. இதனையடுத்து கடையின் இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கடையின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு திருட்டில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது.

இந்த கடையில் ஏற்கனவே 2 முறை பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றதால், போலீசாரின் அறிவுறுத்தலின்படி கடை அமைந்து உள்ள பகுதியில் முழுமையாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது 3-வது முறையாக இங்கு திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது போலீசாருக்கும், அப்பகுதி மக்களுக்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் மேலும் விசாரணை செய்து மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்