கடன் தொல்லையால் ஓட்டல் அதிபர் தற்கொலை - கரூரை சேர்ந்தவர்

கடன் தொல்லையால், கரூரை சேர்ந்த ஓட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-09-13 22:15 GMT
பழனி, 

கரூர் மாவட்டம் வெள்ளைக்கவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் மனோ (வயது 26). இவர், பொள்ளாச்சி பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இவர் பழனி பஸ்நிலைய பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.நேற்று காலையில் வெகுநேரம் அவர் தங்கியிருந்த அறை பூட்டிக் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், உடனடியாக பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அவர் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மனோ தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், ஓட்டல் தொழிலுக்காக மனோ பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்