மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் சென்றவர்கள் சிறையில் அடைப்பு மீட்கக்கோரி கலெக்டரிடம் உறவினர்கள் மனு

மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் சென்று சிறையில் இருப்பவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கலெக்டரிடம், உறவினர்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-09-13 22:00 GMT
நெல்லை, 

மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் சென்று சிறையில் இருப்பவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கலெக்டரிடம், உறவினர்கள் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

நெல்லை மாவட்டம் ராதாபுரம், டோனாவூர், செட்டிக்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக சிலரிடம் பணம் கொடுத்து உள்ளனர். பணம் வாங்கியவர்கள், வேலைக்கு அனுப்பாமல் அவர்களை சுற்றுலா விசாவில் வெளிநாட்டிற்கு அனுப்பி உள்ளனர். அப்படி சுற்றுலா விசாவில் சென்றவர்கள் அங்குள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் சென்று அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களுடைய உறவினர்களை மீட்டு தரவேண்டும் என்று கூறி நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் ஷில்பாவிடம் மனு கொடுத்தனர்.

மீட்க வேண்டும்

நெல்லை மாவட்டம் டோனாவூரை சேர்ந்த எஸ்தர், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு சென்ற தனது அண்ணன் ஆபிரகாமை, மீட்டு தரவேண்டும். அவரை வெளிநாட்டிற்கு பணம் வாங்கி கொண்டு அனுப்பிய ஏஜெண்டு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதேபோல், ராதாபுரம் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், தனது சகோதரன் தினேஷ் என்பவரை மீட்டு தரவேண்டும் என்றும், கோபாலகிருஷ்ணன் என்பவர், மலேசியாவில் சிறையில் உள்ள தனது தம்பி முத்துகிருஷ்ணனை மீட்டு தரவேண்டும் என்றும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்