வாலிபர் மீது தாக்குதல் - வேளாண்மை உதவி இயக்குனர் கைது

ஓமலூர் அருகே, வாலிபர் தாக்கப்பட்ட விவகாரத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-14 22:00 GMT
ஓமலூர், 

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தங்காபுரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 27). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனக்கு விவசாய துறையில் வேலை வாங்கி தருவதற்காக நண்பர் மணிவண்ணன் மூலம் ரூ.13 லட்சத்தை, சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜியிடம் (50) கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை கோபாலகிருஷ்ணனுக்கு வேலை கிடைக்கவில்லை. கொடுத்த பணமும் திரும்ப வரவில்லை.

இந்த நிலையில் கோபால கிருஷ்ணன், மணிவண்ணன் இருவரும் காடையாம்பட்டி வேளாண்மை அலுவலகத்துக்கு வந்து கொடுத்த பணத்தை கோவிந்தராஜியிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கோபாலகிருஷ்ணன் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த அவர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில் எனக்கு வேலை வாங்கித் தருவதற்காக கொடுத்த ரூ.13 லட்சத்தை திருப்பி கேட்கச்சென்றபோது, தன்னை வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜ் கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி இருந்தார்.

இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்