ராசிபுரம் அருகே, துப்பாக்கியுடன் டிக்-டாக் வீடியோ வெளியிட்ட வாலிபர் போலீசில் சரண்

ராசிபுரம் அருகே துப்பாக்கியுடன் டிக்-டாக் வீடியோ வெளியிட்ட வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.

Update: 2019-09-14 22:30 GMT
ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உள்பட வாலிபர்கள் சிலர் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொள்வது போன்ற டிக்-டாக் வீடியோ காட்சிகள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவியது. இந்த வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவிட்டார். அதன்பேரில், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் செல்லமுத்து தலைமையிலான போலீசார் டிக்-டாக் வீடியோ காட்சியில் இடம்பெற்றிருந்த வாலிபர்களை தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுப்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் பரத் (வயது 21) என்பவர் டிக்-டாக் வீடியோ காட்சிக்கு பயன்படுத்திய துப்பாக்கியுடன் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் முன்பு சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அவர் வைத்திருந்த துப்பாக்கி திருவிழாக்களில் சிறுவர்கள் பலூன் சுடுவதற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பரத்திடம் போலீசார் எழுதி வாங்கி கொண்டு அவரை விடுவித்தனர். மேலும், பரத் மீது உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த டிக்-டாக் வீடியோ வெளியிட்டது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்