தீ விபத்தில் குடிசை எரிந்து நாசம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் நிவாரண உதவி

தீ விபத்தில் குடிசை எரிந்து நாசம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் நிவாரண உதவி.

Update: 2019-09-16 22:30 GMT
மலைக்கோட்டை,

திருச்சி குடமுருட்டி பாலம் அருகே அய்யாளம்மன் கோவிலுக்கும் செல்லும் வழியில் ஆற்று கரையோரம் வாத்து கறிக்கடை வைத்து நடத்தி வருபவர் ரவி. இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வாத்து கறிகடையும் நடத்தி வருகிறார். இவரது மகனுக்கு உறவுக்கார பெண் ஒருவருடன் கடந்த 12-ஆம் தேதி திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டு அதற்கான முகூர்த்த பட்டு புடவை, பட்டு வேட்டி மற்றும் வேறு துணிகள், திருமணதிற்காக வாங்கிய பொருட்கள் மற்றும் திருமண செலவுக்கு கடன் வாங்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் உள்ளிட்ட பொருட்களை வீட்டில் வைத்திருந்தார். இந்த பொருட்கள் அனைத்தும் கடந்த 9-ந்தேதி இரவு இவருடைய குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமானது.

இந்தநிலையில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நேற்று நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் புதுமண தம்பதிகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறி, அரசு சார்பில் நிவாரண உதவிகளை அவர்கள் வழங்கினார்கள். பின்னர், அமைச்சர்கள் இருவரும் தனித்தனியாக புதுமண தம்பதிகளுக்கு தங்களது சொந்த நிதியிலிருந்து நிதி உதவிகளும், பட்டு வேட்டி, சேலைகளையும் வழங்கினார்கள். இதில் ஸ்ரீரங்கம் தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்