சிதம்பரம் ஓமகுளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 84 வீடுகள் இடித்து அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

சிதம்பரம் ஓமகுளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 84 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

Update: 2019-09-16 23:00 GMT
சிதம்பரம்,

சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஞானபிரகாசம், நாகச்சேரி, ஓமகுளம் உள்ளிட்ட குளங்களை பலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டி வசித்து வருகிறார்கள். தற்போது நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் சிதம்பரம் நகராட்சி பகுதி குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனகசபை நகர் அருகே உள்ள ஞானபிரகாசம் குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 62 வீடுகள், நாகச்சேரி குளத்தில் கட்டப்பட்டு இருந்த 73 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

இதைதொடர்ந்து ஓமகுளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி ஓமகுளம் பகுதியில் வசித்த மக்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன், நகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. இதையடுத்து அனைவரும் அங்கிருந்து வீட்டை காலி செய்து விட்டனர்.

84 வீடுகள் அகற்றம்

இந்த நிலையில் நேற்று காலை சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், நகராட்சி பொறியாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் வீடுகள் அகற்றும் பணி தொடங்கியது. அப்போது அங்கு வசித்து வந்தவர்களில் சிலர், வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களிடம் அதிகாரிகள், கோர்ட்டு உத்தரவின்பேரில் தான் வீடுகள் இடிக்கப்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்தவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து வீடுகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. இதில் 84 வீடுகள் இடிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த பணியின் போது நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் அங்குபாலகிருஷ்ணன், மின்கண்காணிப்பாளர் சலீம், உதவி மின்பொறியாளர் கார்த்திக் உள்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்