அனுமதியின்றி விளம்பர பதாகைகள், தட்டிகள் வைத்தால் நடவடிக்கை கலெக்டர் டி.ஜி.வினய் எச்சரிக்கை

அனுமதியின்றி விளம்பர பதாகைகள்- தட்டிகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-09-17 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விளம்பர பதாகைகள், தட்டிகள் வைப்பது குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

விளம்பர பதாகைகள் மற்றும் தட்டிகள் வைப்பது குறித்த விதி எண் 2011-ன் படியும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படியும் அரியலூர் மாவட்டத்தில் தனியார், அரசு நிலம், பொது மற்றும் தனியார் கட்டிடங்கள், சாலைகள், மைதானங்கள், பொது மக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பொதுமக்கள் மற்றும் சாலை பயன்பாட்டாளர்கள், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் விளம்பர, வரவேற்பு பதாகைகள் மற்றும் தட்டிகள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது போலீசார் மூலம் குற்ற வழக்கு நடவடிக்கையுடன் ரூ.5 ஆயிரம் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) முருகன், கலெக்டர் அலுவலக சிரஸ்தார் (பொது) முத்துகிரு‌‌ஷ்ணன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அச்சக உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்