பள்ளி இடத்தில் கோவில் கட்ட பூஜை: ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளை பெண்கள் முற்றுகை

கந்தர்வகோட்டை அருகே பள்ளி இடத்தில் கோவில் கட்ட கிராமமக்கள் பூஜை செய்தனர். இதையடுத்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்ற அதிகாரிகளை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-17 23:00 GMT
கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் ராஜபகதூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்ட கிராம மக்கள் பூஜை போட்டனர். இந்நிலையில் பள்ளிக்கூட இடத்தில் கோவில் கட்டப்படுவதால் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கூறி, மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, பள்ளி இடத்தில் கோவில் கட்ட அனுமதியில்லை, எனவே உடனடியாக பள்ளி இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று புதுக்கோட்டை தாசில்தார் பரணிக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை புதுக்கோட்டை தாசில்தார் பரணி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ராஜபகதூர் கிராமத்திற்கு சென்றனர்.

அதிகாரிகளை முற்றுகை

அங்கு கோவில் கட்ட பூஜை செய்த இடத்திற்கு சென்று, ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, ‘இந்த இடத்தில்தான் எங்களை அம்மன் கோவில் கட்ட கூறியுள்ளது. இங்குதான் கோவில் கட்டுவோம்’ என்று கூறினர். இதைத்தொடர்ந்து தாசில்தார் மற்றும் அதிகாரிகள், அரசு இடத்தில் கோவில் கட்ட அனுமதியில்லை. எனவே இன்னும் 2 நாட்களில் பூஜை செய்யப்பட்ட செங்கல் மற்றும் பொருட்களை அகற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்களே அகற்றுவோம் என்று கூறிவிட்டு சென்றனர்.

இது குறித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட பெண்கள் கூறுகையில், சாமி சொல்லிய இடத்திலேயே நாங்கள் கோவிலை கட்டுவோம். இல்லையென்றால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிப்போம், என்று கூறினார்கள். இந்த சம்பவத்தால் நேற்று ராஜபகதூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்