செல்போனை தாயார் வாங்கி வைத்துக்கொண்டதால் தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை

செல்போனை தாயார் வாங்கி வைத்துக்கொண்டதால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-09-17 23:15 GMT
பாகூர்,

கிருமாம்பாக்கத்தை அடுத்த கன்னியக்கோவில் கிராமம் ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி. இவர்களின் மகள் சுமித்ரா (வயது 20). பி.ஏ. பட்டதாரி.

சம்பவத்தன்று சுமித்ரா வீட்டு வேலை செய்யாமல், செல்போனில் பாட்டு கேட்டபடி இருந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது தாயார் கண்டித்துள்ளார். மேலும் அவரிடமிருந்து செல்போனை வாங்கி வைத்துக் கொண்டார். அதனால் கோபித்துக்கொண்டு சுமித்ரா சாப்பிடாமல் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கிருஷ்ணமூர்த்தி வழக்கம்போல் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டார். சுமதி அந்த பகுதியில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது மகள் சுமித்ரா தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சுமித்ராவை டாக்டர் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, ஏட்டு விசுவ நாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சுமித்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்போனை தாயார் வாங்கி வைத்துக் கொண்டதால் ஏற்பட்ட கோபத்தில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

தற்கொலை செய்து கொண்ட சுமித்ரா கண்களை தானம் செய்து இருந்தார். அதன்படி அவரது கண்கள் கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்களால் தானமாக எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்