மின்கம்பத்தில் கார் மோதியதில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பலி

மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பலியானார்.

Update: 2019-09-19 21:30 GMT
மன்னார்குடி,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ஆம்பலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ்(வயது 40). இவர், வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர் உதயகுமார் என்பவருடன் ஒரு காரில் நேற்று அதிகாலை மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை தேவதாஸ் ஓட்டினார். மன்னார்குடி- வடசேரி சாலையில் பைபாஸ் ரோடு அருகில் கார் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. 

இதில் சம்பவ இடத்திலேயே தேவதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் உதயகுமார் காயமின்றி தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார், தேவதாஸ் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கம்பத்தில் கார் மோதியதில் மின்கம்பம் சேதம் ஆனதால் அந்த பகுதியில் காலை 8 மணி வரை மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்