அரசு உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் - விக்கிரவாண்டியில் பரபரப்பு

விக்கிரவாண்டியில் அரசு உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-19 22:30 GMT
விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் நடராஜன் அனைவரையும் வரவேற்றார்.

விக்கிரவாண்டி தாலுகாவில் மாதாந்திர அரசு உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதில் மாவட்ட துணைத்தலைவர் சுப்புராயன், அம்பேத்கர் பேரவை நிர்வாகி தாமோதரன், சங்க நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டு அதன் பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்