எல்லை தாண்டி மீன்பிடித்ததாக விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2019-09-19 23:00 GMT
கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 80 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த தில்லை காளி மகன் விஜயேந்திரன் (வயது 48) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், விஜயேந்திரன் மற்றும் அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராமு (48), சின்னதம்பி மகன் சின்னையன் (40), ஜேசு (39) உள்பட 5 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

5 பேர் கைது

இந்நிலையில் இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

மேலும் அவர்களது விசைப்படகையும் கயிறு கட்டி இலங்கைக்கு இழுத்து சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்