மண்ணடியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து பெண் பலி

மண்ணடியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-09-19 23:15 GMT
பிராட்வே,

சென்னை மண்ணடி அய்யப்பா தெருவைச் சேர்ந்தவர் ஜெரினாபானு (வயது 45). இவர், அப்பகுதியில் தனது தாயார் வசந்தா மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் அதிகாலை 4.30 மணி அளவில் ஜெரினாபானு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஜெரினா பானுவின் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உயிர் தப்பினர்

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஜெரினாபானுவுடன் தூங்கிக்கொண்டிருந்த அவருடைய தாயார், மகன் மற்றும் மகள் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த எஸ்பிளனேடு போலீசார், பலியான ஜெரினா பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்