துவரங்குறிச்சி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்

துவரங்குறிச்சி அருகே குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-09-22 22:15 GMT
துவரங்குறிச்சி,

திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள அயன்பொருவாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). பாலக்குறிச்சியில் ஸ்டூடியோ வைத்துள்ளார். இவரது மனைவி சுமதி (38). முருகேசன், அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால், கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

வழக்கம்போல நேற்றும் முருகேசன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை மனைவி கண்டித்தார். இதனால், கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுமதி, வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.

கணவர் படுகாயம்

இதைப்பார்த்த முருகேசன், மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் கணவர்-மனைவி இருவரும் பலத்த தீக்காயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வளநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்